Monday, July 8, 2024
Home » ஒரு முறை அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு பலன் பசுமைக்குடில் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

ஒரு முறை அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு பலன் பசுமைக்குடில் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

by Lakshmipathi

*முதலீடு என்பது சிறிது… லாபம் பெரிது…

திண்டுக்கல் : மாவட்ட விவசாயிகள் ஒரு முறை அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடிய பசுமைக்குடில் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதிக விளைச்சலை ஆண்டு முழுவதும் பெற ஏற்ற தொழில்நுட்பமாக பசுமைக்குடில் விவசாயம் இருக்கிறது. உலக அளவில் சிறந்ததாக கருதப்பட்டு விவசாயிகளால், இந்த சாகுபடி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பசுமைக்குடில் எனப்படும் நிழல்வலை குடில் விவசாய தொழில் நுட்பம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட உள் அமைப்பில் பயிர்களை சாகுபடி செய்வதாகும்.

பெரும்பாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிக அளவில் பசுமை குடில்கள் அமைக்கப்படுகின்றன. இது தேனி மாவட்டத்திலும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: நிழல் வலையால் போர்த்தப்பட்ட இந்த பசுமை இல்லத்தின் உள்புறத்தில் பயிருக்கு ஏற்ற வெப்பம், தண்ணீர் மற்றும் உரம் தரப்படுகிறது. சுற்றுப்புற நோய் பரவல் காரணிகளில் இருந்து விலகி இருப்பதால் செடிகள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், சாதாரண நிலங்களில் பயிர் செய்யும் போது தண்ணீருக்கும், உரத்திற்கும், பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும், இன்னும் சில நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் அதிகளவில் செலவிட நேரிடுகிறது. இதனால் சாகுபடி செலவு அதிகரிக்கிறது.

எனவே, வழக்கமான சாகுபடி நடைமுறையை ஒப்பிடும் போது பசுமைக்குடில் சாகுபடி மிகுந்த லாபகரமானது. பசுமை குடிலில் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்கு தேவையான தட்ப வெப்பநிலை எளிதில் கிடைக்கும். கரியமிலவாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவரத்தில் ஔிச்சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமிலவாயு கிடைக்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. இதன் காரணமாக விளைச்சல் அதிகமாகவும், தரமான விளைபொருள்களும் கிடைக்கின்றன.

மேலும் மண்ணிலிருந்து ஆவியாகும் நீர், உள்புறத்திலேயே தங்கி விடுவதால் ஈரப்பதமும் அதிகமாகிறது. குறைந்த நீர்பாசனமே தேவைப்படுகிறது. பசுமைக்குடில் விவசாயத்தை சிறு விவசாயிகள் கூட செய்ய முடியும். ஆனால் சிறு விவசாயிகளுக்கு இந்த முதலீடு என்பது சற்று கூடுதலான தொகைதான். அதேவேளையில், இந்த சாகுபடியில் கிடைக்கும் லாபத்தை கணக்கிடும் போது இதற்கு செய்யும் முதலீடு என்பது சிறிதுதான். பசுமைக்குடில் மூலம் இதற்கு செய்த முதலீட்டை ஒரு சில மாதங்களிலேயே எடுத்து விடமுடியும்.

பசுமைக்குடில்களில் குடை மிளகாய், தக்காளி, பேபிகார்ன், பீன்ஸ், வெண்டை, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை பயிரிடலாம். மலைப்பகுதிகளில் ரோஜா, கார்னேசன் போன்ற மலர் செடிகளையும் பயிரிடலாம். பசுமைக்குடில் விவசாயம் செய்யும் போது தண்ணீர், உரம், பூச்சி மருந்துகள், கூலி ஆகியவற்றுக்கான செலவும் குறைகிறது. இந்த முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளும், பூக்களும் மிகவும் நேர்த்தியாகவும், தரமானதாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கும்.

காய்கறிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும். ஒரு முறை அமைக்கப்படும் இந்த குடில் அமைப்பை தொடர்ந்து நன்கு பராமரித்தால் 20 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும். இந்த குடில் அமைக்க விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை வாரியம் மானியம் வழங்குகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற பசுமைக்குடில் தொழில்நுட்பம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பசுமைக்குடில் முறையிலான விவசாயம் நல்ல பலனை தந்து வருகிறது. குளிர்பகுதிகளில் வளர்க்கும் செடிகளை கூட, நம்மூரில் வளர்க்கிறோம். அனைத்து காலநிலை மாற்றத்திற்கும் தாக்குப்பிடித்து செழிப்பாக வேளாண்மை செய்து கூடுதல் லாபம், செலவு குறைவில் பயனடைந்து வருகிறோம்’ என்றனர்.

7 மடங்கு மகசூல் கிடைக்கிறது

பசுமைக்குடில் வேளாண்மை என்பது நவீன விவசாயத்தின் கண்டுபிடிப்பாகும். மக்கள் பெருக்கத்தால் அதிகளவில் உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்களுக்கு தேவை இருந்து வரும் நிலையில், இந்த முறையை பின்பற்றி விவசாயம் செய்வதன் மூலம் அதிக மகசூலும், லாபமும் பெற முடியும். பசுமைக்குடில்கள், நிழல் குடில்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகளின் மூலம் அதிக விளைச்சலும், அதிக லாபத்தையும் பெற முடியும் என்று கண்டறிப்பட்டு இருக்கிறது. நிலத்தில் பயிரிடும்போது கிடைக்கும் மகசூலை விட 5 முதல் 7 மடங்கு அதிக மகசூல் இந்த பசுமைக்குடில் வாயிலாக கிடைக்கிறது.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi