நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோயில் நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை மறுநாள் (14ம் தேதி) முதல் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் தொடங்கும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்களுக்கு ஓண விருந்து அளிக்கப்படுகிறது. வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்படும்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், திருவனந்தபுரம், செங்கணூர், கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.