மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது: வரும் 21ம் தேதி சபரிமலை கோயில் நடை அடைப்பு


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 21ம் தேதி காலை சாத்தப்படும். 20ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் இந்த வருடத்துக்கான மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த 15ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். வரும் 20ம் தேதியுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். அன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நாளை 19ம் தேதியுடன் நெய்யபிஷேகம் நிறைவடையும். மண்டல, மகரவிளக்கு காலத்தின் கடைசி நாள் நெய்யபிஷேகம் என்பதால் நாளை பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவாபரணம் அணிந்த ஐயப்பனை இன்று இரவு வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

21ம் தேதி காலையில் திருவாபரணம் பந்தளத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். அன்று காலை 6.30 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்று பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. நடையை சாத்தி முடித்த பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் மேல்சாந்தி சபரிமலை கோயில் சாவியை ஒப்படைப்பார். இதன்பின் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் பூஜைகளை நடத்த வேண்டும் என்று கூறி அந்த சாவியை மேல்சாந்தியிடம் பந்தளம் மன்னர் பிரதிநிதி திருப்பிக் கொடுப்பார். இதன்பின் பந்தளம் மன்னர் பிரதிநிதி 18ம் படி வழியாக இறங்கி பந்தளத்திற்கு புறப்பட்டு செல்வார். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 13ம் தேதி திறக்கப்படும்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?