சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 2024-2025ம் கல்வி ஆண்டில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 84 ஆயிரத்து 765 இடங்களில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 756 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் தகுதியான விண்ணப்பங்களாக 1 லட்சத்து 57 ஆயிரத்து 767 உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, 28ம் தேதியில் அந்தந்த பள்ளிகளில் சேர்க்கை நடத்தப்பட்டது. அப்போது, உரிய இடங்களுக்கு அதிகமாக வந்த விண்ணப்பங்களை கொண்டு குலுக்கல் முறையின் கீழ் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அது குறித்த விவரங்கள் பெற்றோரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டன. இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தகவல் வரப் பெற்ற பெற்றோர், ஜூன் 3ம் தேதி அந்தந்த பள்ளிகளுக்கு சென்று பள்ளி முதல்வரிடம் சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.