பாடாலூர்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை வாவரையை சேர்ந்த அமர்நாத் (36) ஓட்டி வந்தார். 45க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே ஆம்னி பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
இதில் விளவங்கோடு தாலுகா மருதங்கோட்டையை சேர்ந்த அஜின் மோன் (23) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.