ஈரோடு, நவ.15: ஈரோடு துய்யம்பூந்துறை வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (73). இவருக்கு தலையில் அடிபட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் அவ்வப்போது வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவதும் பின்னர் குடும்பத்தினர் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்கமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், ஏழுவல்லக்காடு நடராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தங்கமுத்து சடலமாக மிதப்பதாக நேற்று குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டனர். இரவில் நடந்து செல்லும் போது தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.