Sunday, October 6, 2024
Home » பழைய கட்டணமே நடப்பாண்டிலும் வசூலிக்கப்படும்: புதிய கட்டணத்தை மாணவர்கள் திரும்பப்பெறலாம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தகவல்

பழைய கட்டணமே நடப்பாண்டிலும் வசூலிக்கப்படும்: புதிய கட்டணத்தை மாணவர்கள் திரும்பப்பெறலாம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தகவல்

by Ranjith

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், சென்னையில் பல்கலைக்கழக வளாகத்தில் நிருபர்களிடம் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணம் தொடர்பாக நேற்று கூறியதாவது: அண்ணா பல்கலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு இதற்கு முன்பு மாற்றப்பட்டது. சிண்டிகேட் கூட்டத்தில், தேர்வுக்கான செலவு அதிகமாக வருவதால், மதிப்பீடு செய்வதற்கு ஒரு பேராசிரியருக்கு வழங்கப்படும் கட்டணத்தை அதிகரிக்க கேட்டார். இதனை ஈடுசெய்ய இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சி என்பது 7 சதவீதம் உள்ளது. இதனை அடிப்படையாக வைத்து கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்றால், 100 சதவீதம் உயர்த்தலாம். ஆனால் 50 சதவீதம் தான் தேர்வு கட்டணத்தை உயர்த்தினோம். அதற்கு கல்லூரிகளும், மாணவர்களும் கட்டணத்தை குறைக்க முறையிட்டுள்ளார்கள். நடப்பு ஆண்டில் இருந்து இந்த தேர்வு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த ஜனவரி மாதம் சிண்டிகேட் ஒப்புதல் பெற்று, கடந்த மாதம் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, கல்லூரிகளிலும் பணம் வசூல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) இந்த விவகாரம் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் கல்லூரிகளிடம் இருந்து கோரிக்கை வந்ததால், அமைச்சர் உடனடியாக எங்களை அணுகி ஏன் இவ்வளவு உயர்த்தியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நாங்கள் விளக்கம் கொடுத்தோம். 4 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் துணைவேந்தர்களிடம் பேசும்போது, உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்காக ஒரு குழு அமைத்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதனை அடிப்படையாக வைத்து இந்த கட்டண உயர்வை நிறுத்தி வைக்க சொன்னார். புதிய கட்டணத்தின் அடிப்படையில் செலுத்திய மாணவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்காக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் தற்காலிக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் உயர்கல்வித்துறை சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களை அழைத்து அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக தேர்வு கட்டணம் நிர்ணயிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு, அது அறிவிக்கப்படும் என்று கூறினார்.

You may also like

Leave a Comment

nineteen + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi