*தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்
ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பத்தில் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த 60 வயது மூதாட்டியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(60) கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி செல்வி விவசாய பணிகளை மேள்கொள்ள நிலத்தின் வழியாக நேற்று காலை சென்றுள்ளார். அப்போது, அருகே இருந்த சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கிருந்தவர்கள் உடனே சம்பவம் குறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். பின்னர், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூதாட்டியை சிகிச்சைக்காக ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.