பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரது மகன் பாலச்சந்திரன்(30). இவர், தனது மனைவியுடன் சென்னை தங்கசாலை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு மீண்டும் குடும்பத்தோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, செங்கல்பட்டு பரனூரில் இருந்து வீராபுரம் பகுதிக்கு செல்வதற்காக 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, பாலச்சந்திரன் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்னோவா காரை பறிமுதல் செய்தனர். இதனை ஓட்டி வந்த பாலசந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபர் யார் என்பது குறித்து அவரது மொபைல் போன் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்