கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு

ஓசூர்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், வாகனங்களுக்கு பயன்படுத்திய பழைய ஆயிலை மூன்று வேளையும் குடித்து வாழ்ந்து வருவதாக கூறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மருத்துவ பரிசோதனை செய்ய ்வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதி பானுவார நகரைச் சேர்ந்தவர் குமார் (45). இவருக்கு பெற்றோர், உறவினர்கள் யாரும் இல்லை. சிறு வயது முதல் வயிற்று பசிக்காக, கிடைத்த வேலையை செய்து வந்தார். பின்னர் மெக்கானிக் வேலை கற்றுக் கொண்டு, கடைகளில் பணியாற்றி தன்னுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது சிறு வயதில் பசித்த போது, சாப்பிட காசு இல்லாததால் வாகனங்களுக்கு பயன்படுத்திய பழைய ஆயிலை குடித்து வந்துள்ளார். நாளடைவில் அதுவே அவருக்கு பழக்கமாக மாறி விட்டது. இதுகுறித்து குமார் கூறுகையில், ‘நான் ஆயிலை குடித்து வருவது சிலருக்கு அதிசயமாக உள்ளது. இதற்காக நான் பல முறை அவர்களிடம் நேரடியாக ஆயிலை குடித்துக் காண்பித்துள்ளேன். இதைக்கண்ட சிலர் என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு, பணமும் கொடுத்து உதவியுள்ளனர்.

இருசக்கர வாகனத்தின் ஆயிலை, கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து மூன்று வேளையும் குடித்து வருகிறேன். இதை தவிர உணவோ, குடிநீரோ நான் எடுத்துக் கொள்வதில்லை. கடந்த 13 வருடங்களாக சபரிமலைக்கு நான் நடந்து சென்று வருகிறேன்’ என்றார். அவர் இவ்வாறு கூறியது பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்