திருவொற்றியூர்: தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனம் அருகே பக்கிங்காம் கால்வாயில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பரிசோதனைக்காக அங்குள்ள தண்ணீர், மண்ணை எடுத்துச் சென்றனர். மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து மிக்ஜாம் புயலின்போது ஆயில் கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து எண்ணூர் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடலில் கலந்து மீன்கள் செத்து மிதந்தன.
இதில் பறவைகளும் பாதிக்கப்பட்டன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பாதிப்பு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதனை செய்து, மேலும் எண்ணெய் படிவம் கலந்து செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் 10க்கும் மேற்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள தண்ணீர் மற்றும் அதிலிருந்து மண்ணையும் பரிசோதனைக்காக அவர்கள் எடுத்துச் சென்றனர். கால்வாயில் ஆயில் கழிவினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதே பகுதியில் நேற்று முன்தினம் ஆயில் டேங்கர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.