பாலாசோர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகா பஜார் ரயில் நிலையம் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர், இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று ரயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
பாலாசோர் மாவட்டத்தில் பணிபுரியும் மூத்த பிரிவு பொறியாளர் (சிக்னல்) அருண் குமார் மஹந்தா, பிரிவு பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப வல்லுநர் பப்பு குமார் ஆகியோரை சிபிஐ கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மீது ஐபிசி பிரிவு 304 (கொலை அல்லாத குற்றமற்ற கொலை) மற்றும் 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.