Sunday, September 8, 2024
Home » எட்டாக்கனி

எட்டாக்கனி

by Karthik Yash

‘இப்போ தொட்டுரும்… அப்போ தொட்டுரும்’ என்றிருந்த ஒரு சவரன் தங்கம் விலை ஒருவழியாக 50 ஆயிரம் ரூபாயை தொட்டுவிட்டது. வரலாற்றிலேயே தங்கம் விலை 50 ஆயிரம் ரூபாயை தொடுவது இதுவே முதல்முறை. உலகம் முழுவதிலும் தங்கம் முக்கிய இடத்தை பெற்றிருந்தாலும், இந்தியர்களுக்கு தங்கம், எப்போதும் தனி ஸ்பெஷலானது. தங்கம் இல்லாமல் இந்தியர்களின் வீட்டில் எந்தவொரு பண்டிகை மற்றும் விசேஷமும் நடக்கவே நடக்காது. கல்யாணம், காதுகுத்து, கோயில் விசேஷம் என எதுவாக இருந்தாலும் தங்கத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, உற்பத்தி குறைவு, நிறுவனங்களின் பங்கு சந்தை வீழ்ச்சி, ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா யுத்தம் என பல காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒன்பது நாட்களில் கிட்டத்தட்ட ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.2,480 வரையிலும்,கிராமுக்கு ரூ.310 வரையிலும் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை உயர்வு என்பது, இந்திய மக்களுக்கு, தினசரி சாப்பிடும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு இணையாக பேசப்படும் விஷயம். குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள், தங்கத்தில் பெரும் முதலீடு செய்வது வழக்கம். தங்கம் மீதான முதலீடுதான் தமிழ்நாட்டு மிடில் கிளாஸ் மக்களின் வலிமையான நிதிநிலைக்கு முக்கியமான காரணமாகும். இன்று வரையில் மாதம் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மிடில் கிளாஸ் மக்கள் பலர் உள்ளனர். இந்தநிலையில், தங்கம் விலையில் உயரும் ஒவ்வொரு ரூபாயும், பிள்ளைகளின் படிப்புக்காகவும், திருமணத்திற்காகவும், சொந்த வீடு வாங்கவும், கட்டவும், சொந்த கார் வாங்க, வெளிநாட்டில் உயர்கல்வி கற்க, அவசர மருத்துவ செலவு என வாழ்வின் முக்கியமான தருணத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

1 சவரன் தங்கத்தின் நேற்றைய விலை – சென்னையில் ரூ.51,120, மும்பையில் ரூ.50,400, டெல்லியில் ரூ.50,520, கோவையில் ரூ.51,120, மதுரையில் ரூ.51,120 என்ற அளவில் இருந்தது. சர்வதேச அளவில் நடக்கும் முக்கியமான பிரச்னைகள் அனைத்தையும் சமாளிக்கும் வகையில் தங்கம் செயல்படுகிறது. அமெரிக்கா தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்தால், ஐரோப்பாவும் தனது வட்டி விகிதத்தை குறைத்தால், இந்திய ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை குறைக்கும். இது சாத்தியமாகும் பட்சத்தில் முதலீட்டு சந்தையின் பாதை மாறும், தங்கம் விலை குறையும். அதேவேளையில், பென்ச்மார்க் வட்டி விகிதம் குறையும் காரணத்தால் வீட்டுக்கடன், வாகன கடனுக்கான வட்டி விகிதமும் குறையும். சர்வதேச பொருளாதாரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தினமும் தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலக அளவில் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் என்பதால், தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். மொத்தத்தில், ஏழைகளின் எட்டாக்கனியாக உயர்ந்துவிட்டது தங்கம்.

You may also like

Leave a Comment

fifteen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi