எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் வரை எங்களது சட்ட போராட்டம் தொடரும். சசிகலா விரும்பினால் உறுதியாக அவரை சந்திப்பேன். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பாஜவுடனும் இணைந்து பணியாற்றுவதற்கான நல்ல சூழல் இருக்கிறது. இந்த நிமிடம் வரை பாஜவுடன் தொடர்பில் இருக்கிறோம்.கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மக்களுக்கு கடுமையான வெறுப்பு இருக்கிறது.
ஜெயலலிதாவிற்கு கட்சி பணத்தில் இருந்து ரூ.2 கோடி கடன் கொடுக்கப்பட்டதா என்று கேட்கிறீர்கள். கட்சி நிதியில் இருந்து ரூ.2 கோடி பணம் கொடுங்கள், ஒரு வருடத்தில் தந்து விடுகிறேன் என்று ஜெயலலிதா என்னிடம் கேட்டார். நான் காசோலை மூலமாக ரூ.2 கோடி கொடுத்தேன். அந்த பணத்தை ஜெயலலிதா காசோலையாக திருப்பி கொடுத்துவிட்டார். நான் பொருளாளராக இருந்தபோது பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யும்போது இதனை தெரிவித்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* கொடநாடு கொள்ளை வழக்கால் கெட்ட பெயர்
”எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது, தலைமை செயலகத்தில் அவருடைய அறைக்கு சென்று, ஆட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடியுங்கள் என்று கூறினேன். ஆனால், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.