திருவள்ளூர்: பொது சுகாதார துறையில் களப்பணிகளில் பணியாற்றும் கிராம பகுதி சுகாதார செவிலியர்கள் 350க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தனலட்சுமி, துணை தலைவர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, கிராம சுகாதார செவிலியர்களை துணை சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரப்பிட வேண்டும், துணை சுகாதார நிலையத்திற்கு இடைநிலைப் பணியாளர்களை நியமனம் செய்வதை தவிர்த்திட வேண்டும்,
தாய் சேய் நலப் பணிகளில் மேற்கொள்ளப்படும் கர்ப்பிணிப் பெண்கள் பதிவேடு, ஆதார் அட்டை இணைத்தல் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி வழங்கும் திட்டத்தில் சேர்த்தல் போன்ற பணிகளை சிரமம் இல்லாமல் மேற்கொள்ள தேவையான லேப்டாப் – டேப் போன்ற பொருட்களை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு டேட்டா ஆபரேட்டரை நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.