மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நவ. 2வது வாரத்தில் பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அடுத்த 8 முதல் 10 நாட்களில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்.
288 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது நல்லது. எங்களது அரசு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. பெண்கள் மத்தியில் எங்களது அரசுக்கு ஆதரவு இருக்கிறது. திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், 1.5 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். அரசின் ‘லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் இதுவரை 1.6 கோடி பெண்கள் நிதியுதவி பெற்றுள்ளனர். 2.5 கோடி பெண்களுக்கு இத்திட்டத்தை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.