அந்த வகையில், பிரபல கூலிப்படை தலைவரான முருகேசன் ஏ கேட்டகிரி ரவுடிகள் பட்டியலில் உள்ளார். இவர் பிரபல வடசென்னை ரவுடியான பாம் சரவணன் கூட்டாளி ஆவார். பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருக்கமான முருகேசன் மீது திமுக பிரமுகரான மடிப்பாக்கம் செல்வம், அதிமுக பிரமுகரான செங்குன்றம் பார்த்திபன் ஆகியோர் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாவர். முருகேசன் சக ரவுடிகளுக்கு கூலிக்கு ஆட்களை அனுப்பி பல கொலைகளை செய்து வந்தவர்.இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்ததால், தனிப்படை போலீசார் கூலிப்படை தலைவரான முருகேசனை கடந்த ஒரு மாதங்களாக தேடி வந்தனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க சில ரவுடிகள் திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகர உளவுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதற்கிடையே கூலிப்படை தலைவன் முருகேசன் சென்னை அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் கூலிப்படை தலைவன் முருகேசனை நேற்று இரவு கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேநேரம் கூலிப்படை தலைவன் முருகேசன் சென்னையில் கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, முருகேசனை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.