சேலத்தில் இன்று அதிகாலையில் காரில் ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி கைது: தப்பியோடிய கூட்டாளிகள் 4 பேருக்கு வலை

சேலம்: சேலத்தில் இன்று அதிகாலையில் காரில் அரிவாள், கத்திகளுடன் வந்த பிரபல ரவுடியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். தப்பியோடிய கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் யாரையாவது கொலை செய்ய கூலிப் படையாக வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தசோழபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையில் நேற்றிரவு ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 2 மணியளவில் அங்குள்ள ஓட்டல் அருகே சாலையோரத்தில் கார் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது.

அதில் இருந்த 5 பேரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் காரில் சோதனை நடத்தியதில், 2 அரிவாள், 3 கத்திகள் இருந்தன. இதனிடையே 5 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி உடனடியாக மாநகர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர்கள் ஆனந்தி, அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காரில் இருந்து தப்பியோடிய ஒருவரை மடக்கிப்பிடித்த போலீசார் அரிவாள், கத்திகளுடன் காரை பறிமுதல் செய்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர், திருநெல்வேலியை சேர்ந்த குமார் என்ற கொக்கி குமார் (28) என்பதும், இவர் மீது 3 கொலை வழக்கு உள்பட 22 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இதில் 4 வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசார் தேடி வந்ததும், தப்பியோடியது இவரின் கூட்டாளிகளான சுடலைமுத்து, முத்து, சுந்தரபாண்டி, மாரி என்பதும் தெரியவந்தது. மேலும் சென்னைக்கு செக்யூரிட்டி வேலைக்கு காரில் செல்வதாக கொக்கிகுமார் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

இவர்கள் யாரையாவது கொலை செய்ய கூலிப்படையாக வந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கொக்கிகுமார் மீது பிடிவாரண்ட் இருப்பதால் நெல்லை போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலத்தில் அதிகாலையில் பிரபல ரவுடி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி