பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்தாண்டுக்கான பரிசு தொகுப்புகள் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே முதல்வர் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடையே ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகின. இருப்பினும், சமீபத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. அதற்கான மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு முழுகவனத்தையும் செலுத்தியது.
தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு இம்மாவட்டங்கள் திரும்பியுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் இருப்பை உறுதி செய்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டவுடன், டோக்கன் விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளை விரைவில் தொடங்கிவிடுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 குடும்பங்களுக்கு வழங்க அரசு ரூ.2429.05 கோடி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.