பெங்களூரு: மஜத மாநில தலைவரும், ஒன்றிய தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி பெங்களூருவில் நேற்று நடந்த பாஜ, மஜத கூட்டத்தில் பங்கேற்றார். தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் குமாரசாமி பங்கேற்று காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாதயாத்திரை நடத்துவது தொடர்பாக கருத்துகளை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் குமாரசாமி பேசினார். அப்போது குமாரசாமியின் ஒரு மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. குமாரசாமி, அதை துடைத்த போது ரத்தம் வேகமாக வரத்தொடங்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரது மகன் நிகில், ஜெயநகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரசாமியை அழைத்து சென்று அனுமதித்தார். டாக்டர்கள், உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.