Sunday, June 30, 2024
Home » வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு அதிகமாக ஆயுதங்கள் கடத்தல்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு அதிகமாக ஆயுதங்கள் கடத்தல்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

by Suresh

திருவனந்தபுரம்: வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு துப்பாக்கிகள் உள்பட பெருமளவு ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருவது பெங்களூரு போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.பெங்களூருவில் ஆயுதம் கடத்தும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கப்பன் பார்க் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தீவிர விசாரணையில் கடந்த 6ம் தேதி கேரளாவைச் சேர்ந்த நீரஜ் ஜோசப் சிக்கினார். அவரை பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் வைத்து போலீசார் பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து அவரது பிஎம்டபிள்யூ காரில் சோதனை நடத்தினர். அப்போது 3 கைத்துப்பாக்கிகள், 99 துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நீரஜ் ஜோசப்பை கப்பன் பார்க் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையின் போது, கண்ணூர் சிறையில் உள்ள ரஜீஷ் என்பவர் கூறியதின்படி துப்பாக்கிகளை கடத்தியதாக தெரிவித்தார்.

கோழிக்கோட்டில் புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சந்திரசேகரன் கொலை வழக்கில் ரஜீஷ் கைதாகி கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீரஜ் ஜோசப் அளித்த தகவலை தொடர்ந்து பெங்களூரு போலீசார் கண்ணூர் விரைந்து சென்று ரஜீஷை கைது செய்து பெங்களூரு கொண்டு சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மியான்மரில் இருந்து துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் நாகலாந்துக்கு கடத்திக் கொண்டு வரப்படுகின்றன.

பின்னர் இங்கிருந்து ஒரு துப்பாக்கிக்கு ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி பெங்களூரு வழியாக கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். போடோ தீவிரவாதிகள் அதிகமாக உள்ள நாகலாந்தில் இருந்துதான் இந்தத் துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் அனைத்தும் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இது தொடர்பாக பெங்களூரு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறையிலுள்ள ரஜீஷ் எதற்காக கேரளாவுக்கு ஆயுதங்களை கடத்துகிறார். இதற்கு முன்புகடத்தப்பட்ட ஆயுதங்கள் யார்? யாருக்கு? சென்றன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சந்திரசேகரன் கொலை வழக்கு கேரளாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். கோழிக்கோடு அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார்.

கோஷ்டிப் பூசல் காரணமாக கட்சியில் இருந்து விலகி புதிதாக புரட்சி மார்க்சிஸ்ட் என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கினார். இந்தநிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சந்திரசேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ரஜீஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சந்திரசேகரன் கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவி ரமா புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறார். கடந்த 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சந்திரசேகரனின் மனைவி ரமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையான வடகரை தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

9 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi