வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..!!

சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கான பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம். இ.ஆ.ப., தலைமையில் இன்று (14.09.2024) தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் , ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்களும் பருவமழையின் சவால்களையும், இதனை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், வடகிழக்குப் பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர். சென்னை பெருநகர காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அவர்கள் பின்வரும் அறிவுரைகளை
வழங்கினார்கள்:

1. பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு அலுவலர்களுக்குமான பேரிடர் மேலாண்மை பணிகள் வரையறுக்கப்பட வேண்டும்.
2. குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
3. சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தரம் முன்னேற்றம் குறித்து, மாவட்ட மற்றும் மண்டல கண்காணிப்பாளர்களை கொண்டு கள ஆய்வு செய்ய வேண்டும் இந்த பகுதிகளில் நடைப்பெற்று வரும் பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும் 15.10.2024க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
4. வருவாய்த்துறை, காவல்துறை, மீன்வளத்துறையின் அனைத்து முதல் நிலை மீட்பாளர்களின் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அவர்களை பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை பணிகளுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
5. பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள். நீர் இறைப்பான்கள். படகுகள் பருவ மழை தொடங்கும் முன்னரே பாதிப்புகளுக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
6. பருவ மழை தொடங்கும் முன்னரே மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. அனைத்து வானிலை வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில், பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான, பகுதிவாரியான வானிலை தகவல்கள் வழங்க நடடிவக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள். சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்கள், காவல்துறைத் தலைவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர். தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர்கள். உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அதிரடி லாபம் தரும் ஆர்கானிக் பாக்கு!

‘’எதிர்பார்த்தவர்களின் மூக்கு அறுபட்டது’’ திமுக- விடுதலை சிறுத்தைகள் கொள்கை கூட்டணி தொடரும்: தொல்.திருமாவளவன் திட்டவட்டம்

தஞ்சை பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் சிபிஐ தகவல்