வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.115 கோடியில் 6 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; ரூ.5.22 கோடியில் முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார்

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.22 கோடி செலவில் முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ என்ற திட்டத்தை ரூ.1,000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சி குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14.03.2024 அன்று சென்னை, தங்கச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை பகுதிக்கு விரிவான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

* அதனைத் தொடர்ந்து, சென்னைபெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின் கீழ், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் ரூ.53.50 கோடி மதிப்பீட்டில், 1,25,402 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரைதளத்தில் 64 கடைகளும், அலுவலக அறையும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் 70 கடைகளும், இரண்டாம் தளத்தில் உணவு விடுதி வளாகம் உட்பட 54 கடைகளும், முற்றத்தில் மீன் வள அமைப்புகள் என மொத்தம் 188 கடைகளுடன் அமைக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம்.

* ராயபுரம் மூலகொத்தலத்தில் சுமார் 0.67 ஏக்கர் பரப்பளவில் ரூ.14.31 கோடி மதிப்பீட்டில் 41,593 சதுர அடி கட்டிட பரப்பளவில் அடித்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய சமுதாய நலக்கூடம்,
* சென்னை புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் சுமார் 1.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.43 கோடி மதிப்பீட்டில் 45,198 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரைதளத்தில் சலவை கூடங்கள், இயந்திரக் கூடங்கள், துவைக்கும் கூடங்கள், உலர்த்தும் இயந்திரங்கள் மற்றும் துணி தேய்க்கும் இடம், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் துணி உலர்த்தும் இடம், என 60 அறைகள் கொண்ட நவீன சலவைக்கூடம்,
* புழல் ஏரிக்கரையில் சுமார் 8.17 ஏக்கர் பரப்பளவில் ரூ.16.96 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, இயற்கை காட்சி அமைப்புடன் கூடிய உயர்மட்ட நடைபாதை, மியாவாக்கி காடு வளர்ப்பு, குழந்தைகளுக்கான கண்காட்சி இடம், இயற்கை குளம், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள புழல் ஏரிக்கரை,
* ரெட்டேரி ஏரிக்கரையில் சுமார் 4.38 ஏக்கர் பரப்பளவில் ரூ.13.12 கோடி மதிப்பீட்டில் நுழைவாயில் அரங்கம், இணைக்கும் பாலங்கள், இயற்கை தோட்டம் மற்றும் பூங்கா, நடைபாதை, சூரிய மின்கலம் கொண்ட நிழல் இருக்கைகள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள ரெட்டேரி ஏரிக்கரை,
* கொளத்தூர் ஏரிக்கரையில் சுமார் 0.4 ஏக்கர் பரப்பளவில் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் இயற்கை நடைபாதை, படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, செயற்கை நீர்வீழ்ச்சி, இசை பூங்கா, ஒளிரும் மீன் சிற்பங்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள கொளத்தூர் ஏரிக்கரை என மொத்தம் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
* மேலும், கொளத்தூர் நேர்மை நகரில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரூ.2.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி ஆணையாளர் அலுவலகம், கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம், சி.கே.சாலையில் நவீன சலவை கூடம் மற்றும் 3 நியாய விலை கடைகள் என மொத்தம் ரூ.5.22 கோடி செலவில் முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், தாயகம் கவி, வெற்றியழகன், ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய தலைவர் ரங்கநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, வீட்டுவசதி துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் மோகன், மீன்வள துறை ஆணையாளர் மகேஸ்வரி ரவிக்குமார், சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ என்ற திட்டத்தை ரூ.1,000 கோடியில் அடுத்த 3 ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும்.
* கடந்த 14.3.2024 அன்று சென்னை தங்கச் சாலையில் நடந்த நிகழ்ச்சியில், வடசென்னை பகுதிக்கு விரிவான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,378 கோடியிலான 219 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Related posts

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!!

இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தடை செய்ய கோரி போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது

குருப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி