பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் இன்று காலை கொதிகலன் குழாய் கசிவு காரணமாக, மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள முதலாவது நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என நாளொன்றுக்கு மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். எனினும், கடந்த சில மாதங்களாக மேற்கண்ட அலகுகளில் ஒன்றன் பின் ஒன்றாக தொழில்நுட்ப கோளாறு அல்லது கொதிகலன் குழாய் கசிவு காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. அவற்றை தற்காலிகமாக சீரமைத்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2வது நிலையின் முதல் அலகில் இன்று காலை கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த அலகில் கொதிகலன் குழாய் கசிவை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன் 1வது நிலையின் 3வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏறகெனவே 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.