தூத்துக்குடி: வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பியதாக புகார் கூறப்பட்ட பாஜ வக்கீல் பிரசாந்த் குமார் உம்ராவ் நேற்று தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த மாதம் வைரலானது. இதையடுத்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார், வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பியதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜ செய்தி தொடர்பாளர் வக்கீல் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 153(ஏ), 504, 505(1)(பி), 505(1)(சி), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக போலீசார் முயற்சித்தனர். ஆனால் பிரசாந்த் குமார் உம்ராவ், உச்சநீதி மன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். அப்போது, விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பிரசாந்த் குமார் உம்ராவ், நேற்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். அங்கு திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் மீண்டும் வரும் 13ம் தேதி (நாளை மறுநாள்) ஆஜராக பிரசாந்த் குமார் உம்ராவுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.