Thursday, August 1, 2024
Home » கடத்தப்படாத குழந்தையை சட்டப்படி தத்தெடுக்கலாம்: விதிகளில் தளர்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

கடத்தப்படாத குழந்தையை சட்டப்படி தத்தெடுக்கலாம்: விதிகளில் தளர்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

by Francis

மதுரை: குழந்தையை தத்தெடுக்க அனுமதி கோரிய வழக்கில், கடத்தப்படாத பட்சத்தில் சட்டப்படி அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க அனுமதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த கணவன், மனைவி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்களுக்கு குழந்தை இல்லை. ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022ல் பதிவு செய்தோம். எங்களுக்கு திருமணமாகாத பெண் ஒருவருக்கு பிறந்த ஆண் குழந்தை கிடைத்தது. அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற முயன்றபோது, சட்டப்படி தத்தெடுக்காமல் குழந்தையை வளர்த்து வருவதாக வி.கே.புரம் போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குழந்தையை மாவட்ட சமூகப்பணிகள் இயக்குனர் வசம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி கோரி 3.3.2023ல் மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சட்டப்படியான குழந்தை தத்தெடுப்பு முறைகளை பின்பற்றவில்லை. இருப்பினும் அந்த குழந்தை 6 மாதமாக மனுதாரர்களின் பராமரிப்பில் இருந்துள்ளது.

குழந்தைகள் மாயம் தொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவாகி வருகின்றன. குழந்தை மாயம் தொடர்பான புகார்கள் வரும்போது உடனடியாக பெற்றோரின் மரபணு (டிஎன்ஏ) விபரங்களை சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும். குழந்தை மீட்கப்படும்போது குழந்தையின் டிஎன்ஏவுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டிஎன்ஏ விபரங்களை ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்க முடியும். இதுதொடர்பாக உள்துறை செயலாளரும், ஏடிஜிபியும் (பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு) அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கில் குழந்தை கடத்தப்படாவிட்டால் மனுதாரர்கள் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர், விசாரணையை விரைந்து முடித்து 3 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

You may also like

Leave a Comment

19 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi