வேட்புமனுவுடன் மருத்துவ அறிக்கை கோரி வழக்கு வேட்பாளரின் நோய்கள் பற்றி தெரிவிக்க வற்புறுத்த முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்வதோடு 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால் அந்த விவரங்களை கேட்க முடியாது. மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டுமானால், அதுகுறித்து சட்டத்திருத்தம்தான் கொண்டு வர வேண்டும். இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்குமாறு வற்புறுத்த முடியாது. இது தொடர்பான தீர்ப்புகள் இருந்தால் அதன் நகல்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related posts

பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

வீட்டுமனை பட்டா கோரி மனு