திடீரென குடும்பத்தினருக்குள் பிரச்னை ஏற்படுவதால் திருமணத்திற்கு முன் ‘போட்டோ ஷூட்’ வேண்டாம்: மகளிர் ஆணைய தலைவி வேண்டுகோள்

ராய்ப்பூர்: திருமணத்திற்கு முன் போட்டோ ஷூட் எடுப்பது என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது என்று மாநில மகளிர் ஆணையத் தலைவி கிரண்மயி நாயக் கூறினார். திருமணத்திற்கு முன்பு ‘போட்டோ ஷூட்’ எடுப்பது என்பது தற்போது பலராலும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், ‘போட்டோ ஷூட்’ குறித்து சட்டீஸ்கர் மாநில மகளிர் ஆணையத் தலைவி டாக்டர் கிரண்மயி நாயக் கூறுகையில், ‘திருமணத்திற்கு முன் போட்டோ ஷூட் எடுப்பது என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது. அது நம்முடைய கலாசாரம் அல்ல.

சமீபத்தில் திருமணம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னாக, மணமகன் தரப்பில் சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார் மகளிர் ஆணையத்திற்கு வந்தது. இந்த மணமக்கள் திருமணத்திற்கு முன் ‘போட்டோ ஷூட்’ எடுத்தனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு இடையில் திருமணம் நடக்கவில்ைல என்பதால், திருமண ஏற்பாடுகள் செய்த வகையில் ஆன செலவுக்கான தொகையை மணப்பெண்ணின் குடும்பத்தார் மணமகன் வீட்டாரிடம் கேட்டனர்.

ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க முடியாது என்றனர். இவ்விவகாரம் மகளிர் ஆணையத்திற்கு வந்ததால், மணமகன் குடும்பத்தாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று மணமகள் வீட்டாரிடம் ஒப்படைத்தோம். பின்னர் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை இருதரப்பினரும் அழித்துவிட்டனர். எனவே திருமணத்திற்கு முந்தைய ‘போட்டோ ஷூட்’ எடுப்பதால் தேவையற்ற சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன’ என்றார்.

Related posts

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!