மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ‘ப்ராஜெக்ட் கே’ ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் வெளியிட்ட வலைப்பதிவில், ‘சினிமா துறைக்கு வருவதற்கு முன் கொல்கத்தாவில் நான் பணியாற்றிய போது, சிகரெட், மது பழக்கங்களுக்கு ஆளானேன். மது, சிகரெட் குடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எனக்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும் மது, சிகரெட்டை தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன்.
இது என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக கருதினேன். ஆனால் தற்போது மதுவை குடிப்பதில்லை. சிகரெட்டிலும் இதே நிலைதான் பின்பற்றினேன். கொஞ்சம் நாட்கள் கூட மது, சிகரெட்டை பயன்படுத்த வேண்டாம். உடனே விட்டு விடுங்கள். இது எப்படி என்றால் நமக்கு ஏற்பட்ட புற்றுநோயை ஒரே நேரத்தில் அகற்றுவது போன்றது. மனம் எந்த அளவுக்கு தடுமாறுகிறதோ, அந்த அளவுக்கு இந்த வேண்டாத பழக்கம் நம்மிடம் தொடர்ந்து வரும்’ என்று பதிவிட்டுள்ளார்.