சென்னை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் பொய் பிரசாரங்களை பரப்புகிறார் என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாடியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கோயில்கள் மீதும், அறநிலையத்துறையின் மீதும் அவதூறு பரப்புகின்றனர். ஒன்றிய நிதியமைச்சரே இவ்வாறு செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல; தேர்தல் வரவிருப்பதால் இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியலில் பாஜக ஈடுபடுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் திமுக ஆட்சியை ஆன்மீகத்திற்கு எதிரானதாக சித்தரிக்கும் முயற்சியில் பாஜகவினரும், ஆளுநர் ரவியும் ஒன்றாக கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர்.
கோயிலின் உள்ளே LED திரை அமைப்பது, அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட எதற்கும் தடைவிதிக்கவில்லை, ஆனால் முறையான அனுமதி பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியை ஆன்மீகத்திற்கு எதிரானதாக சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். ஆன்மிகத்தை ஆன்மிகமாக பார்க்கின்றபோது நாங்கள் எந்த தடையும் விதிக்க தயாராக இல்லை. ஆன்மிகத்தை அரசியலில் கலப்பதற்கும், அரசியலாக்குவதற்கும் முற்படுகிறபோதுதான் சட்டத்திற்கு உட்பட்டு இந்து சமய அறநிலையத்துறை முடிவுகளை மேற்கொள்கிறது. தொடர் பொய் பிரசாரங்களை பரப்புகிறார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோயிலுக்கு நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்ய தான். நீங்கள் எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும், எவ்வளவு பொய்பரப்புரைகளை பரப்பினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், உங்கள் எண்ணம் ஒரு போதும் தமிழ்நாட்டில் எடுபாடது இவ்வாறு கூறினார்.