Thursday, September 19, 2024
Home » நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

by Karthik Yash

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவாலி பகுதியை சேர்ந்தவர் 24 வயதான கல்லூரி மாணவர். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் பெரிந்தல்மண்ணாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 9ம் தேதி இறந்தார். கோழிக்கோட்டில் அவரது ரத்தம், உமிழ்நீர் மாதிரியை பரிசோதித்ததில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவரின் வீடு உள்ள திருவாலி உள்பட சுற்றியுள்ள 5 வார்டுகள் தீவிர கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்தப் பகுதிகளுக்கு வெளிநபர்கள் செல்லவோ, அங்கிருந்து தேவையில்லாமல் வெளியே செல்வதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருமணம் உள்பட நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் சினிமா தியேட்டர்கள் செயல்படாது. கடைகள் காலை 7 முதல் 10 வரை மட்டுமே திறக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பலியான மாணவர் 3 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

* 10 பேருக்கு நிபா அறிகுறி
நிபா காய்ச்சல் பாதித்து பலியான கல்லூரி மாணவருடன் தொடர்பில் இருந்த 150க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேருக்கு நிபா அறிகுறிகள் தென்பட்டது. இதைத்தொடர்ந்து இவரது ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக எடுத்து கோழிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi