கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ்; கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

கோவை: நிபா வைரஸ் எதிரொலியாக கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் பலி, மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருவோரின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். அதிலும் சிறுவனுக்கு இணை நோய்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகவும் சோதனை செய்ததில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்ட மறுநாளே சிறுவன் உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே கேரளாவுக்கு மத்திய சுகாதாரத்துறையில் இருக்கக்கூடிய குழு ஒன்று கேரளா விரைந்துள்ளது. கேரளா சென்று நிபா வைரஸ் தொடர்பாகா ஆய்வு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் கேரள எல்லை பகுதிகள் அனைத்தையும் அல்ர்ட்டாக்கி தமிழக சுகாதாரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எல்லையில் இருந்து வரும் மக்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்படுவார் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் தீவிர சோதனை நடத்தவும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை – கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் தற்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து கோவை வரும் பொது மக்கள் காய்ச்சல் பரிசோதனை, உள்ளிட்ட சோதனைக்கு பின்னர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களின் டயர்கள் போன்றவற்றில் சானிடைசர் தெளிக்கப்பட்டு தமிழகத்திற்குள் அனுப்பப்படுகிறது.

 

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை