சென்னை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் நடைபெற்ற ஆய்வு கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சி தலைவர் உள்ளிட்டவர்களுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் – நிவாரண பணிகள் குறித்த உத்தரவுகளை தொலைபேசி வாயிலாக வழங்கி கொண்டிருந்தேன். மழை தொடரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமை செயலகத்தில் ஆய்வு செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆ.ராசா எம்.பி., நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.