சென்னை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பொறுப்பு அமைச்சர், எம்.பி., ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (20.7.2024) தலைமைச் செயலகத்தில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர். எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்களும், நீலகிரி மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர். ஆ. ராசா, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ப. சுந்தரவடிவேல் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.