இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடத்தில் தனது பேச்சு நிறுத்தப்பட்டதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.எனக்கு முன்னால் பேசியவர்களுக்கு 10 -20 நிமிடங்கள் வரை பேச அனுமதி வழங்கப்பட்டது. மேற்கு வங்கத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று பேசும்போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து அவமதித்துவிட்டார்கள். மத்திய பட்ஜெட் ஒருதலைபட்சமாகவும் அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது; ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை பேசவிடாமல் தடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிய அரசு அவமதித்துள்ளது. என்னை பேச விடாமல் தடுத்தது நாட்டின் அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிப்பதாகும்,”இவ்வாறு தெரிவித்தார்.