பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு குமணன்சாவடி பகுதியில் ரூ.20 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ரேஷன் கடைக்கான கட்டிடப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பூந்தமல்லி 17வது வார்டு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அதிக எண்ணிக்கையில் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வந்தனர். அதிக எண்ணிக்கையில் அட்டைதாரர்கள் இருப்பதால் பொருட்கள் வாங்க தாமதமாவதால் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதையடுத்து நேற்று காலை குமணன்சாவடி பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமை தாங்கினார். இதில் நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், வட்ட செயலாளர் உமா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், நகர திமுக அவைத் தலைவர் எச். தாஜூதீன், நகர நிர்வாகிகள் துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டெல்லி ராணி மலர்மண்ணன், அசோக் குமார், புண்ணியகோட்டி, வின்பிரட், நெல்சன், அன்பழகன், சௌந்தரராஜன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.