புதுடெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிக்கள் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான மையங்கள் (கவுன்ட்டர்கள்) புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களின் பதிவு மையங்கள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த மையங்கள் வரும் 14ம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிக்கள், தங்களது பதிவு நடைமுறையை எளிதாக்கவும், காகித வடிவில் மேற்கொள்ளும் பணிகளைக் குறைக்கும் நோக்கிலும், இணையவழியில் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக பல்வேறு படிவங்களில் எம்பிக்கள் கையொப்பமிட வேண்டியதில்லை. இது நேர விரயத்தை தடுக்கும் என்று மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மக்களவைத் தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்படும் எம்பிக்களை பதிவு செய்யும் நடைமுறை பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.