எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பழைய கட்டுமானங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள், கடைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அனுமதியும், மின் இணைப்பும் வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை வலியுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து, நகர்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநர், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார். மேலும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தொடர் கட்டிடம் தொடர்பாக பிரச்னைகள் இருக்கிறது.
அதற்கு வழிவகை செய்வதற்காக ஏற்கனவே துறையின் மூலமாக ஆலோசித்து நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதேபோல், திட்ட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய பிரச்னையும் இருக்கிறது. இவையெல்லாம் ஒருங்கிணைத்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். அமைச்சர் உறுதி அளித்து 4 மாதங்கள் ஆகியும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை. நாகர்கோவில் மாநகராட்சி மக்களை பாதிக்கின்ற வகையில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, உடனடியாக கட்டிட அனுமதி மற்றும் மின் இணைப்பு வழங்க விரிவான அரசாணையை வெளியிட வேண்டும்.