புதுடெல்லி: டெல்லியில் புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் 300 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அரசு ெகாண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த காவல் நிலையங்களில் புதிய சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியை பொருத்தமட்டில் காவல்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. இருந்தாலும் பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட எப்ஐஆர்கள் பதிவாகி உள்ளன.
இவற்றில் இ-எப்ஐஆர்களும் அடங்கும். மேற்கண்ட எண்ணிக்கையில் எப்ஐஆர்கள் பதிவு செய்வது வழக்கமான நடைமுறைதான் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு டெல்லியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் முதல், நிஹால் விஹார் பகுதியில் நடந்த பயங்கர விபத்து வரை பல வழக்குகள் பதிவாகி உள்ளன. முன்னதாக நேற்று முதல் எப்ஐஆர் டெல்லி சாலையோர வியாபாரி மீது பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த எப்ஐஆர் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ‘புதிய சட்டத்தின் முதல் வழக்கு குவாலியரில் பதிவு செய்யப்பட்டது’ என்றார்.