தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டம், பீர்ப்பூர் எம்.பி.டி.ஓ. அலுவலக கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எந்த நேரத்தில் எப்போது யார் தலையில் விழுமோ என்ற அச்சத்தில் அலுவலக ஊழியர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாழடைந்த இந்த அலுவலகம் நாளுக்குநாள் மேலும் சிதிலமடைந்து வருவதால் மேற்கூரை இடிந்து உச்சந்தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அலுவலக ஊழியர்கள் தற்போது ஹெல்மெட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். ஹெல்மெட் இல்லாதவர்கள் அலுவலகத்திற்கு வெளியே மேஜை அமைத்து பணிபுரிகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், ‘புதிய கட்டிடம் கட்ட மதிப்பீடு தயாரித்து நிதி வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்வதில்லை. மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி, அலுவலகத்தில் உள்ள மதிப்புமிக்க பதிவேடுகள் நனைந்து சேதமடைகிறது. இனியாவது புதிய கட்டிடம் கட்ட அரசு முன்வர வேண்டும்’ என்றனர்.