புதிய கூட்டணியுடன் நேபாள பிரதமராக கே.பி.ஒலி 4வது முறையாக பதவியேற்றார்: 2 துணை பிரதமர்கள், 19 அமைச்சர்கள் பொறுப்பேற்பு

காத்மாண்டு: நேபாளத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, கே.பி.சர்மா ஒலி 4வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 2 துணை பிரதமர்கள், 19 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தாவின் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நேபாளி காங்கிரஸ் கட்ச, ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியுடன் புதிய கூட்டணி அமைத்தது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த பிரசந்தா பதவி இழந்தார். இதைத் தொடர்ந்து, புதிய கூட்டணியுடன் நேபாளி காங்கிரசின் கே.பி.சர்மா ஒலி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார்.

அதற்கு குடியரசு தலைவர் ராம் சந்திரா பவுடேல் அனுமதி அளித்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்று விழா நேற்று நடந்தது. இதில் புதிய பிரதமராக பதவியேற்ற ஒலிக்கு குடியரசு தலைவர் பவுடேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சர்மா ஒலியுடன், 2 துணைப் பிரதமர்களாக பிரகாஷ் மான் சிங், பிஷ்ணு பவுடெல் ஆகியோரும் 19 அமைச்சர்களும் பதவியேற்றனர். வரும் 2027ல் அடுத்த பொதுத்தேர்தல் நடக்கும் வரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சுழற்சி முறையில் ஆட்சி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

தற்போது நேபாள நாடாளுமன்றத்தில் நேபாள காங்கிரசுக்கு 88 உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 77 எம்பிக்கள் என 165 உறுப்பினர்கள் பலம் உள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு பிரதமர் ஒலி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கு 275 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதால் ஒலி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே ஒலி அக்டோபர் 2015 முதல் ஆகஸ்ட் 2016 வரையிலும், பிப்ரவரி 5, 2018 முதல் ஜூலை 13, 2021 வரையிலும், மே 2021 முதல் ஜூலை 2021 வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். தற்போது 4வது முறையாக அவர் பதவி ஏற்றுள்ளார். நேபாளத்தில் கடந்த 16 ஆண்டுகளில் 14 முறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள பிரதமராக பொறுப்பேற்றுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘நமது இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாக பணியாற்றுவதையும் எதிர்நோக்குகிறோம்’’ என கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘நேபாளத்தின் பிரதமராக பதவி ஏற்றுள்ள கே.பி. ஷர்மா ஒலிக்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, இந்தியாவும் நேபாளமும் தனிப்பட்ட நட்பு மற்றும் கூட்டாண்மை உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஒளிமயமான எதிர்காலத்திற்காக பரஸ்பர ஒத்துழைப்பின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தவதை ஒவ்வொரு இந்தியரும் எதிர்நோக்குகிறோம்’’ என கூறி உள்ளார்.

Related posts

களையிழந்த ஓணம் பண்டிகை; சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் உள்ள எந்த பள்ளிகளும் முன்மாதிரி பள்ளிகளாக மாறவில்லை: பிரதமர் மோடியை மாணவர் சமுதாயம் மன்னிக்காது என செல்வப்பெருந்தகை ஆவேசம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு