பூந்தமல்லி: மதுரவாயல் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட் நிதியின் கீழ், ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியார் விளையாட்டு திடல் மேம்படுத்தும் பணி மற்றும் ஆலப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு ரூ.97.80 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி ஆகிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி கலந்துகொண்டு, ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆலப்பாக்கம், கங்கையம்மன் கோயில் தெருவில் நமக்கு நாமே திட்டம் மூலம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வளசரவாக்கம் மண்டலம்-11, மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர் ரமணி மாதவன், திமுக வட்ட செயலாளர் மாதவன், மாவட்ட பிரதிநிதிகள் பிருந்தாவனம், சதீஷ், சமூக சேவகர் ஆலப்பாக்கம் டில்லிபாபு, திமுக நிர்வாகிகள் ஆனந்தன், உதயம்வேணு, ஆனந்தகுமார், குப்புசாமி, முருகன், பொது நலச்சங்க நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.