சென்னை: சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆற்றிய உரை பின்வருமாறு: மூன்றாண்டுகளில் புதுமைப்பெண் திட்டத்திற்குப் பிறகு 2.73 லட்சம் பெண்கள் உயர்கல்விக்கு சேர்ந்துள்ளனர். உதாரணத்திற்கு சென்னை மாநிலக் கல்லூரியில் மட்டும் 25 சதவிகிதமாக இருந்த மாணவிகள் சேர்க்கை தற்போது 45 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. ஒரு கல்லூரி அமைப்பது சாதாரண விஷயம் அல்ல. மாநகராட்சி இடம் என்றால் இரண்டு ஏக்கர், நகராட்சி என்றால் மூன்று ஏக்கர் வேண்டும். ₹20 கோடி ஒரு கல்லூரிக்கு ஒதுக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு தொடர் செலவாக மூன்றரை லட்சம் வரை செலவாகும். நியாயமான கோரிக்கையாக கல்லூரி வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கேட்கிறார்கள். உங்கள் கோரிக்கைகள் முதலமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டு நிதிநிலைக்கு ஏற்ப எந்தெந்த இடங்களில் கல்லூரிகள் தேவை என்பது செயல்படுத்தப்படும். அதேபோல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார்கள், முதலமைச்சரிடம் தெரிவித்து அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.