திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி 4 புதிய மாநகராட்சிகள் உதயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளையும், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய 3 புதிய நகராட்சிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் ரூ. 800 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, ரூ.1,192 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி திட்டங்களை தொடங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்பட்டதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தந்த மாநகராட்சிகளின் மாமன்ற தலைவர்களிடம் வழங்கினார். அதேபோல், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய 3 புதிய நகராட்சிகளை அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச ஆணைகளையும் முதல்வர் வெளியிட்டார்.

அத்துடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக நாகர்கோவில் மாநகராட்சியில் 3.20 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் ரூ.296.08 கோடி செலவிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தை சார்ந்த வேலகாபுரம் மற்றும் மாமண்டூர் ஊராட்சிகளிலுள்ள 4720 மக்கள் பயனடையும் வகையில் 10 குடியிருப்புகளுக்கான ரூ.3.18 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1.58 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 250 ஊரக குடியிருப்புகளுக்கான வைகை அணையை நீராதரமாகக் கொண்டு ரூ.162.43 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.461.69 கோடி செலவில் 261 ஊரக குடியிருப்புகளுக்கான 3 குடிநீர்த் திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

புவியிடம் தகவல் அமைப்பு மேலாண்மை மையம்
அதேபோல் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் ₹17.80 கோடி மதிப்பீட்டில் புவியிடம் சார்ந்த தகவல் அமைப்பு மேலாண்மை மையத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம், சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளின் புவியிடம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதனை நிர்வகிக்க மேலாண்மை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள காணொளி திரை மூலம் இந்த கட்டமைப்பின் விவரங்களை வரைபடத்துடன் முழுமையாக பார்க்கவும், பராமரிப்பு பணிகள் விவரங்கள் மற்றும் புதிய குடிநீர், கழிவுநீர் கட்டமைப்பு பணிகளை குறிப்பில் ஏற்றும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வரைபடங்களை எந்த இடத்தில் இருந்தும் பார்க்க முடியும். இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதோடு, இதன் பிரதி திருச்சியில் உள்ள தரவு மையத்தில் பாதுகாக்கப்படும். மேலும், இந்த வரைபட விவரங்களை அவரவர் இடத்திலிருந்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் இம்மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முடிவுற்ற குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள்
மாதவரம் பகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதிக்கு ₹2.32 கோடி செலவில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம், மணலி மண்டலம் சின்னச்சேக்காடு பகுதிக்கு ₹22.60 கோடி செலவில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப் பணிகள், ராயபுரம் மண்டலம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் கீழ் கூவம் ஆற்றின் கரையோரம் எழும்பூர் லாங்ஸ் கார்டனில் ₹27.23 கோடி செலவில் நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அண்ணா நகர் மண்டலம் வில்லிவாக்கம் (பிரிவு – 2) கழிவுநீரிறைக்கும் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம் லகூன் கழிவுநீரிறைக்கும் நிலையம் வரை உள்ள 200 மி.மீ விட்டமுள்ள பழைய வார்ப்பிரும்பு குழாயை மாற்றி ₹2.27 கோடி செலவில் 400 மி.மீ விட்டமுள்ள வார்ப்பிரும்பு குழாயாக விரிவுபடுத்தப்பட்ட பணிகள், கோடம்பாக்கம் மண்டலம் நெசப்பாக்கத்தில் நாளொன்றுக்கு 54 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 40 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ₹28.74 கோடி செலவில் புதிய தரக்குறியீடுகளுக்கு ஏற்ப புதுப்பித்து, புனரமைத்து, மேம்படுத்தப்பட்ட பணிகள், வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ஜானகிராமன் காலனி பகுதிக்கு ₹17.88 கோடி செலவில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப் பணிகள், ஆலந்தூர் மண்டலம் மணப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், பெல் நகர் மற்றும் பிள்ளையார் கோயில் தெரு பகுதிகளுக்கு ₹12.56 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்கள், கழிவுநீர் விசைக்குழாய்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்கள், திருபெரும்புதூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு ₹35.88 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாள சாக்கடை திட்டம் என மொத்தம் ₹167.28 கோடி செலவிலான 9 முடிவுற்ற திட்ட பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

நகராட்சி நிர்வாகத் துறையில் திறந்து வைக்கப்பட்ட திட்ட பணிகள்
சேலம் மாநகராட்சியில் ₹5.60 கோடியில் 10 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், திருப்பூர் மாநகராட்சியில் ₹4.90 கோடியில் 14 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் ₹1.40 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், , தாம்பரம் மாநகராட்சியில் ₹58 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்கள், ஆற்காடு, நரசிங்கபுரம், பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், மற்றும் துவாக்குடி ஆகிய நகராட்சிகளில் ₹1.78 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 பூங்காக்கள், தூத்துக்குடி மாநகராட்சியில் ₹10.73 கோடியில் நீர்த்தேக்கத்தொட்டி, தாம்பரம் நகராட்சியில் ₹54 லட்சம் செலவில் 2 நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் ₹16.22 கோடி செலவில் வணிக வளாகம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் ₹7 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட சந்தை, மேலூர் மற்றும் கூடலூர் (தேனி) ஆகிய நகராட்சிகளில் ₹9.76 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 2 சந்தைகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் ₹2.86 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், செங்கல்பட்டு மண்டல அலுவலகத்திற்கு ₹3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மண்டல அலுவலக கட்டிடம், பொன்னேரி நகராட்சியில் ₹1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலகக் கட்டிடம், சேலம் மாநகராட்சியில் ₹1.98 கோடி செலவில் 2 சுற்றுச்சுவர்கள், ₹1.77 கோடி செலவில் உபரிநீர் வெளியேற கால்வாய், ₹8.27 கோடி செலவில் தெருவிளக்குகள், பொன்னேரி நகராட்சியில் ₹83 லட்சம் செலவில் 2 வளமீட்பு மையங்கள் என மொத்தம் ₹109.58 கோடி செலவிலான 79 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் திறந்து வைக்கப்பட்ட திட்ட பணிகள்
மயிலாப்பூர் லூப் சாலையில் ₹14.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி, மணலி மண்டலம் தேவராஜ் தெருவிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் ஆஞ்சநேயா நகர், பழைய ஆட்டுத்தொட்டி தெருவிலுள்ள தெலுங்கு ஆரம்ப பள்ளி, சாந்தோமிலுள்ள சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் அயனாவரம் பாலவாயல் தெருவிலுள்ள சென்னை ஆரம்பப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ₹8.66 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் பள்ளி கட்டடங்கள், மணலி மண்டலம், பொன்னுசாமி தெருவில் ₹29 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடம், திருவொற்றியூர் மண்டலம், சுனாமி குடியிருப்பு மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், டி.என்.எச்.பி. சாலை ஆகிய பகுதிகளில் ₹1.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய விளையாட்டுத் திடல்கள், சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர், எழில் நகர் அணுகு சாலை மற்றும் டி.என்.எச்.பி. 1500 பிளாட்ஸ் பகுதிகளில் ₹1.67 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 புதிய பூங்காக்கள், சோழிங்கநல்லூர் மண்டலம், டி.என்.எச்.பி. இ-36 சாலையில் ₹89 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல், என மொத்தம் ₹28.42 கோடி மதிப்பிலான முடிவுற்ற 11 திட்டப்பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் திறந்து வைக்கப்பட்ட திட்ட பணிகள்
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அங்காளம்மன் கோவில் வீதியில் 24 எண்ணிக்கையில் சுகாதார பணியாளர் குடியிருப்பு 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. அவ்விடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு புதியதாக குடியிருப்புகள் கட்டுவதற்கு 2021-22ம் ஆண்டு மூலதன மானிய நிதியின் கீழ் ₹3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள 24 தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்புக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, புதியதாக கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் குடியிருப்பில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் கழிப்பிடத்துடன் கூடிய குளியலறை என 550 சதுரடியில் ஒரு குடியிருப்பு 6 வீடுகள் வீதம் நான்கு பகுதிகளாக மொத்தம் 24 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
அண்ணாநகர் மண்டலம் சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே ரயில்வே காலனி 3வது தெருவையும், மாதா கோவில் தெருவையும் இணைக்கும் வகையில் ₹1.60 கோடி மதிப்பீட்டில் பாலம், அம்பத்தூரில் வார்டு-81 மற்றும் 85க்குட்பட்ட ரயில்வே சந்திக்கடவிற்கு மாற்றாக ₹11.40 கோடி மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்லும் சுரங்கப்பாதை, அடையாறு மண்டலம், தொல்காப்பியப் பூங்காவில் பகுதி-1 மற்றும் பகுதி-2 இணைக்கும் வகையில் ₹9.35 கோடி மதிப்பீட்டில் தொங்கும் ஆகாய நடைபாலம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக ₹5.07 கோடி மதிப்பீட்டில் மூன்று வழி பெட்டகக் கால்வாய், கிண்டி பாலம் சந்திப்பு முதல் சக்ரபாணி தெரு சந்திப்பு வரை உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையை ₹20.75 கோடி மதிப்பீட்டில் மறுவடிமைப்பு செய்யும் பணி, பெசன்ட் நகர் கடற்கரை, காரல் ஸ்மித் நினைவகத்திற்கு அருகில் ₹1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை, தண்டையார்பேட்டை மண்டலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் அருணாசலேஷ்வரர் கோவில் தெரு உட்பட திட்ட சாலைகளை ₹64.14 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள், விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கோவளம் வடிநில பகுதியில் எம்.1. மற்றும் எம்.2 பாகங்களில் ₹666.32 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதித் திட்டத்தில் ₹58.33 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பினை மறுசீரமைக்கும் பணி, சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை ₹259.03 கோடி மதிப்பீட்டில் 364.63 கி.மீ. நீளத்திலான 2,089 சாலைகள் அமைக்கும் பணி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும நிதியில், மாதவரம் மண்டலத்தில் ₹38.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. கனரக மற்றும் இலகுரக வாகன நிறுத்த முனையம், சாலைகள் மற்றும் பல்நோக்குக் கட்டடங்கள் மேம்படுத்தும் பணி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட புலியூர் கால்வாய் (ட்ரஸ்ட்புரம் கால்வாய்) ₹16.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று
வாரியத்தின் புதிய திட்ட பணிக்கு அடிக்கல்

அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர் டி.என்.பி.எச் காலனியில் 68வது தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ₹3.46 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குடிநீர் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி என ஒட்டுமொத்தமாக ₹1,192 கோடி மதிப்பீட்டிலான 30 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு, கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்