திருச்சி, கோவை மற்றும் தென்மாவட்டங்களுக்கு புதிய தொழிற்சாலைகள் வரும் என்று தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: திருச்சி, கோவை மற்றும் தென்மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இந்தியாவில் உற்பத்தியாகும் மின்னணு வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது என்ற சாதனை பெற்றுள்ளது.

இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் ஆட்டோ மொபைல் உற்பத்தி மற்றும் அனைத்து துறைகளிலும் முதல் இடத்தை பிடித்திருக்கிறது குறிப்பாக தமிழகம் மின்னணு வாகனங்களின் தலைநகரமாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சென்ற ஆண்டு தகவலின்படி, இருசக்கர வாகனங்களில் 70 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்தியாவில் விற்பனையாக கூடிய 40 சதவீத மின்னணு வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆனவை. இது தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றுதான் கருத வேண்டும்.

மின்னணு உற்பத்தி வாகன உற்பத்தியில் முதலிடம் பெற்றது போலவே மின்னணு வாகனம் உற்பத்தியிலும் நிச்சயமாக இந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான வெற்றியை தமிழகம் மின்னணு துறையில் பெறும். தமிழகத்திற்கு பல புதிய தொழில்துறை நிறுவனங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய அளவில் ஒரு மகத்தான முன்னேற்றத்தை மின்னணு வாகன துறை பெறும். கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்னணு வாகனங்கள் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை, கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது முதன்மையாக உள்ளது. திருச்சி மற்றும் கோவையை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளும் மிகப்பெரிய வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடி, தென் மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. புதிதாக 2 வளர்ச்சி திட்டங்கள் வரவுள்ளது. இந்த ஆட்சியில் புதிய தொழிற்சாலைகளில் மகளிர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஓலா, போஸ்க் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை