படகு இல்லத்திற்கு புது வரவு ஏற்காடு ஏரியில் மிதிவண்டி வடிவிலான நவீன படகுகள்

*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காடு : சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்குள் நுழைந்ததும், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை. குடும்பத்தோடும், ஜோடியாகவும் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, படகு இல்லத்தில் பல்வேறு ரகங்களில் படகுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 10 பேர் அமர்ந்து செல்லக்கூடிய மோட்டார் பொருத்திய விசைப்படகுகள், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயக்கப்படும் துடுப்பு படகுகள், தாங்களே இயக்கக்கூடிய மிதிபடகுகள், குழந்தைகளை கவரும் விதமாக மிக்கி மவுஸ், அன்னப்பறவை உருவங்களை கொண்ட மிதிபடகு போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் உல்லாச சவாரி செய்வது வழக்கம். தற்போது, புதிய வரவாக நவீன படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படகு குலாம் அதிகாரிகள் கூறுகையில், ‘முழுக்க முழுக்க மனித சக்தியால் இயங்கக் கூடிய மிதிவண்டி வடிவிலான படகு புதிய வரவாக வந்துள்ளது. தேன்நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படகு வந்த முதல் நாளிலேயே, ஏராளமானோர் சவாரி செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினர். முழங்கால் வலி ஏற்படாத வகையில், இந்த படகு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். வயதானவர்கள் கூட சுலபமாக இயக்க முடியும். சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பினை பொறுத்து, கூடுதல் படகுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை