* ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் பகீர் தகவல்
மதுரை: நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவருக்கும் இடத்தை பிரித்து கொடுக்க 50 கோடி சதுர அடி இடம் வேண்டும். ஆனால் 5 கோடியே 9 லட்சம் சதுர அடியே இருக்கிறது என நியோமேக்ஸ் மோசடி வழக்கில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள், நிலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரிசெய்ய விரும்புவதாகவும், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. 32,048 பேர் முதலீடு செய்துள்ளனர் என நிறுவனமே உத்தேசமாகத்தான் குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். மேலும், முதலீடு செய்த தொகை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. எனவே நீதிபதி கமிட்டி அமைத்தால், அது மறைமுகமாக புலன் விசாரணையை பாதிக்கும். நியோமேக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில், 32,048 முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்கு 49 கோடியே 72 லட்சம் சதுர அடி இடம் தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் டிடிசிபி அப்ரூவல் பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே உள்ளது. இப்போது அவர்களிடம் இருக்கும் நிலத்தின் அடிப்படையில் 32,048 முதலீட்டாளர்களுக்கு இடத்தை பிரித்து கொடுத்தால், ஒருவருக்கு 697 சதுர அடிதான் கொடுக்க முடியும். எனவே இது சாத்தியமற்றது. எனவே நியோமேக்ஸ் தரப்பில் தாக்கல் செய்த விசாரணை குழு அமைப்பது குறித்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
இதேபோல் பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘நியோமேக்ஸ் நிறுவனம் ஓய்வு நீதிபதி தலைமையில் குழு கேட்பது நீதிமன்றத்தை திசை திருப்பும் வேலை. எனவே இதனை அனுமதிக்க கூடாது’’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி தீர்ப்புக்காக 20ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.
* 2 இயக்குநர்கள் கைது
நியோமேக்ஸ் நிதிநிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும், மாதந்தோறும் 12 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து திருப்பி தராமல் மோசடி செய்து உள்ளனர். இதனால், முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான பாஜ பிரமுகர் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 92 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன. நிதிநிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான மதுரை விராட்டிப்பத்துவை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது சகோதரரும் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களில் ஒருவருமான சிங்காரவேலன் ஆகியோர் கடந்த 18ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நிதிநிறுவனத்தின் இயக்குநர்களான மைக்கேல் செல்வி, நடேஷ்பாபு ஆகிய 2 பேர் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.