Friday, September 13, 2024
Home » நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் உட்பட கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் உட்பட கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: முத்தமிழறிஞர் கலைஞரின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்கள், கலைஞரின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.14.42 கோடி நூலுரிமை தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணை வழங்கியுள்ளார். தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் சூன் 3, 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் பிறந்து, தமது கடின உழைப்பாலும் அளப்பரிய திறமையாலும், தமிழ் வளத்தாலும், தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் ஆளுமையாக விளங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் என்பது பெயர் மட்டுமல்ல; தமிழினத்தின் தன்னேரில்லாத தனி முகவரி! பல தலைமுறைகளின் எழுச்சிக்கான திறவுகோல்! 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என ஒரு தலைமுறை மாற்றத்திற்கு வித்திட்ட மகத்தான தலைவர். தமிழுணர்வு கொண்ட 14 வயது சிறுவனாகத் தம் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, 15ம் வயதில் “மாணவ நேசன்” என்ற கையெழுத்து ஏடு தொடங்கி, 18ம் வயதில் அண்ணாவின், “திராவிட நாடு” இதழில் இளமைப்பலி என்ற அவரது முதற்கட்டுரை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தம்முடைய 20வது வயதில், திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். தமது 23ம் வயதில் இராஜகுமாரி திரைப்படத்திற்கு முதன்முதலாக வசனம் எழுதினார்.

முதன் முதலில் “முரசொலி” என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942ம் ஆண்டு வெளியிட்டு; பின்னர் 1946 முதல் 1948 வரை திங்களிதழாக மாற்றி; பின் மீண்டும் 1953ல் சென்னையில் திங்களிதழாகத் தொடங்கி 1960ம் ஆண்டில் அதனை முழுமையான நாளிதழாக மாற்றினார். அந்த முரசொலி நாளிதழ் இன்றும் முழங்குகிறது. அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ, சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் – நாடகக் காப்பியம், சேரன் செங்குட்டுவன், திருவாளர் தேசியம் பிள்ளை, தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித இராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்), மந்திரிகுமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார்.

வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல், ஒரே ரத்தம், ஒரு மரம் பூத்தது, அரும்பு, பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, நடுத்தெரு நாராயணி ஆகிய புதினங்களையும்; ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு, பாயும் புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம், தாய் – காவியம் ஆகிய வரலாற்றுப் புதினங்களையும்; சங்கிலிச் சாமியார், கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை, தப்பிவிட்டார்கள், தாய்மை, நாடும் நாடகமும், முடியாத தொடர்கதை, பதினாறு கதையினிலே, நளாயினி, பழக்கூடை, தேனலைகள், ஒருமரம் பூத்தது, மு.க.வின் சிறுகதைகள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

கவிதையல்ல, முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு), அண்ணா கவியரங்கம், Pearls (Translation), கவியரங்கில் கலைஞர், கலைஞரின் கவிதைகள், வாழ்வெனும் பாதையில், கலைஞரின்
திரை இசைப்பாடல்கள், கலைஞரின் கவிதை மழை, காலப் பேழையும் கவிதைச் சாவியும் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் அவரது கவித்திறமையை வெளிப்படுத்துவன. கலைஞரின் குறளோவியம் மிகவும் புகழ்பெற்ற நூல்; தேனலைகள், சங்கத் தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட தமிழறிஞர்கள் போற்றும் உரை நூல்களையும் படைத்துள்ளார். உடன்பிறப்புகளுக்குக் கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1957 முதல் 2018ம் ஆண்டுவரை கலைஞர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தனியொரு மனிதரால் அவரது வாழ்நாள் காலத்தில் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் கலைஞர். எண்பதாண்டுகாலம் பொது வாழ்வு, ஐந்துமுறை முதலமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல் முத்தமிழறிஞர் கலைஞர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார்.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவையாகும். இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞரின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு அனுமதிப்பதாக அறிவித்தார். தற்போது அவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும் என்று அவரது மகனும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது உலகத் தமிழர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

20 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi