Saturday, June 29, 2024
Home » நெல்லிக்குப்பம் ஆலை ரோடு பகுதியில் செயல்படும் இரவுநேர வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள்

நெல்லிக்குப்பம் ஆலை ரோடு பகுதியில் செயல்படும் இரவுநேர வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள்

by Lakshmipathi

*பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் இரவு நேர வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் ஆலை ரோடு பகுதியில் ஜம்புலிங்கம் பூங்கா திடலில் திங்கள் கிழமை இரவுநேர வாரச்சந்தை சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி சந்தை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இரவுநேர வாரச்சந்தையாக நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு வெளிக்கடைகளைவிட காய்கறிகள் பண்ருட்டி மார்க்கெட் விலைக்கே விற்கப்படுவதால் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களும் இந்த இரவு வாரச்சந்தைக்கு வந்து காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைக்காரர்களிடம் சுங்க வரி வசூல் செய்ய நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.

இதன் மூலம் நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஆனால் சந்தை நடக்கும் இடத்தில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதரவில்லை. காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி ஏற்படுத்தித்தரவில்லை என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் காய்கறி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மழை காலத்தில் பெரும் சிரமத்துக்குள்ளாகி மழையில் நனைந்தபடி தரையில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

சந்தைக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளுக்கும் குடிக்க குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் நடந்து செல்லகூட சாலை வசதி இல்லை. சந்தை நடக்கும் இடம் குண்டும் குழியுமாக உள்ளதால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நெல்லிக்குப்பம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரவு நேர வாரச்சந்தையில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, வியாபாரிகளுக்கான தொகுப்பு கட்டிடங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

fourteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi