நெல்லை காங். தலைவர் மர்ம மரணத்தில் 4 மாதமாகியும் துப்பு கிடைக்காமல் திணறல்; சிபிசிஐடி போலீசார் இதுவரை 110 பேரிடம் விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 110 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர். எனினும் 4 மாதங்களாகியும் இந்த வழக்கில் துப்புதுலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்தவர் ஜெயக்
குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த மே 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கை நெல்லை தனிப்படை போலீசார் துவக்கத்தில் விசாரணை நடத்தினர். இதில் ஜெயக்குமார் தனசிங் அவரது கைப்பட எழுதியதாக கிடைத்த கடிதத்தில் அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றதால் அதுகுறித்து விசாரணை நடத்தினர். எனினும் ஜெயக்குமார் எப்படி இறந்தார் என எந்த துப்பும் துலங்கவில்லை. இதன் காரணமாக இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

ஜெயக்குமார் தனசிங் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீசார், கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்தில் 32 பேர் உட்பட 150 பேருக்கு மேல் சம்மன் அனுப்பினர். இதன் அடிப்படையில் பாளை. பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஜூன் மாதம் 3வது வாரத்தில் இருந்து தினமும் சுமார் 4 முதல் 5 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். நேற்று ஜெயக்குமார் தனசிங்கின் உறவினர்கள், வெளி மாநிலங்களில் வசித்து வரும் நண்பர்கள் உட்பட 5 பேரிடம் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வீடியோவில் பதிவு செய்தனர். இந்த விசாரணை நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி 6 மணி நேரம் நடந்தது. நேற்று வரை பாளை பெருமாள்புரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 110 பேர் ஆஜராகி உள்ளனர். எனினும் 4 மாதங்களாகியும் இந்த வழக்கில் துப்பு துலங்காமல் மர்மம் நீடித்து வருகிறது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு